சேலத்தில் திருநங்கைகளின் உணர்வுப்பூர்வமான தியாகி முத்துக்குமரன் வீரவணக்க பேரணி
தோழர் முத்துக்குமரனின் வீரமரணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகம் முழுக்க மாணவர்கள், பெண்கள், பத்திரிக்கையாளர்கள், வழக்குரைநர் என பொதுமக்கள் அலை அலையாய் திரண்டு தங்கள் உணர்வுகளை வீரமரணத்தை ஒட்டி வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் மூன்றாம் பாலினமான திருநங்கைகளும் விதிவிலக்கல்ல.
சேலத்தில் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து இன்று மாலை நடத்திய தியாகி தூத்துக்குடி முத்துக்குமரன் வீர வணக்க ஊர்வலத்திற்கு திருநங்கைகளே முன்னிலை இருந்து தொடக்கி வைத்தனர். மாலை 4 மணிக்கு அஸ்தம்பட்டியில் தொடங்கிய ஊர்வலம் பழைய பேருந்து நிலையத்தில் முடிந்தது.
திரளான திருநங்கைகள் , பாட்டாளி மக்கள் கட்சி , பெரியார் திராவிடர் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் , குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய திருநங்கைகள் "ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு தான் ஒதுக்கப்பட்ட மக்களின் வலி தெரியும்அந்த வகையில் நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழர்களின் வலியினை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. தமிழர் இனம் என்ற அடிப்படையில் பெருமையோடு இந்த போராட்டத்தில் பங்கெடுத்து கொள்கிறோம். ஈழத்திலே கொத்து கொத்தாக தமிழர்களை கொன்றுக்குவிக்கும் இலங்கை அரசை சர்வதேச சமூகம் தள்ளி வைக்கணும்" என்று தங்களுக்கே உரிய பாணியில் பேசினார்கள்.
சுதந்திர தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும், உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும், ஆயுத உதவியை இந்திய அரசு நிறுத்தவேண்டும் என உணர்வாளர்கள் முழங்கினர்.
தூத்துக்குடி முத்துக்குமரனின் உடலில் பற்றிய ' தீ ' தமிழகத்து மக்களின் உணர்வுகளை சூடாக்கி கொழுந்து விட்டு எரிகிறது தனி ஈழம் என்ற இலக்கை நோக்கி!
|
Date: 01/31/2009
Owner: Cory Pack
Size: 5 items
|