MIA : பணம், புகழ் வந்தால் தமிழர்களை மறக்கும், இவர்களுக்கு மத்தியில்

by admin on 10/02/09 at 11:42 am

இலங்கையில் திட்டமிட்ட இனஅழிப்பு நடைபெற்று வருகிறது - மாதங்கி மாயா அருள்பிரகாசம்: தொலைக்காட்சி நேர்காணலின் GTNனின் தமிழ் வடிவம்:

இலங்கை வடபாகத்தில் மூன்றரை இலட்சம் மக்கள் போருக்குள் அகப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. அவர்களுக்கான உதவிகள் தடை செய்யப்பட்டுள்ளன. மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் உண்மையைச் சொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு ஒரு இனஅழிப்புத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார் இசைஞரான மாயா என்கிற மாதங்கி மாயா அருள்பிரகாசம்.

ஓஸ்கார் மற்றும் கிராம்மி விருதுகளுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மாயா தன்னுடைய இசைத் தொகுப்புக்களால் இதயங்களை ஆட்டிப்படைக்கும் இலங்கைத் தமிழர். அவர் அண்மையில் வழங்கிய தொலைக்காட்சி நேர்காணலிலிருந்து:

இலங்கை இந்தியாவிற்கு அருகிலிருக்கும் ஒரு சிறு தீவு. அங்கு சிங்களவர்கள் தமிழர்கள் என்று இரண்டு இனங்கள் இருக்கின்றன. பெரும்பான்மையான சிங்களவர்களின் அரசாங்கம் அங்கு இருக்கிறது. தமிழர்கள் சிறுபான்மையினர். நான் அந்தச் சிறுபான்மையான தமிழர்களுள் ஒருத்தியாகவே பிறந்தேன். என்னுடைய வாழ்க்கைக் காலத்தின் ஒரு குறுகிய காலத்தை ஏறத்தாழ பத்து வருடங்கள் அங்கு வாழ்ந்தேன். நான் அங்கிருந்த அந்தக் காலகட்டத்திலேயே போர் ஆரம்பமானது. அதன் காரணமாக நான் இங்கிலாந்தில் அகதியானேன்.

நான் அங்கிருந்து புறப்பட்டதிலிருந்து இன்று வரை அங்கு ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு நடைபெற்று வருகிறது. இலங்கை எங்கிருக்கிருக்கிறது என்று எவருக்கும் தெரியாததால் அந்த இனஅழிப்பைப் பற்றிக்கூட எவருக்கும் தெரிவதில்லை. அங்கு மூன்றரை இலட்சம் மக்கள் போருக்குள் அகப்பட்டுள்ளார்கள். அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. அவர்களுக்கான உதவிகள் தடை செய்யப்பட்டுள்ளன. மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்கள் உண்மையைச் சொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அங்கு நீண்டகாலமாக ஒரு இனஅழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தும் ஒருவருக்கும் அது தெரியவரவில்லை என்றால் அதற்குக் காரணம் பிரச்சாரம் தான். நீங்கள் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்கும் போது புலிகளைப் பற்றியும் சிந்திக்கிறீர்கள். அது நூறுவீதம் சரியானதல்ல. முதலில் தமிழர் என்று சொல்லப்படுபவர்கள் தமிழ் மக்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ப்புலிகள் என்பது வேறுபட்ட ஒரு விடயம். இரண்டு பிரிவினருமே வேறுவேறானவர்கள். ஒரு சதுரத்தையும் வட்டத்தையும் போல.

இலங்கையில் நான்காயிரம் தமிழ்ப் புலிகள் மட்டுமே உள்ளனர். நீங்கள் விரும்பினால் ஒரே நாளில் அவர்களைத் துடைத்தெறிந்துவிட முடியும். இலங்கை இராணுவத்தைப் போல பெரும்படையணி மற்றும் ஆயுதங்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட படையினரைக் கொண்டிருக்கிற பெரிய இராணுவம். அதனால் புலிகளை இலகுவாகக் கையாள முடியும். அந்தப் படையினரைக் கொண்டு முழுத் தமிழ் இனத்தையே அழித்துவிட முடியும். இதன்காரணமாகத் தான் அங்கு நடப்பவற்றை நீங்கள் கேட்க முடியாமல் இருக்கிறது. அதற்கான பிரதான காரணம் ஊடகங்களில் பிரச்சாரம் தான். ஏனெனில் நீங்கள் ஒரு பயங்கரவாத இயக்கமாக இருந்தால் உங்களுக்குப் பேசுவதற்கான உரிமையில்லை. தமிழ் மக்களும் அவ்வாறு தான். தமிழ் மக்களுக்கு அங்கு பேசுவதற்கான உரிமை இல்லை. அவர்களுக்கு வாழ்வதற்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு அங்கு எந்த வகையான சுதந்திரங்களும் இல்லை.

இது தான் இங்கு பிரதானமான பிரச்சினை. நீங்கள் அல் ஹைய்டா பற்றிச் சிந்திக்கும் போது ஆப்கானிஸ்தானைப் பற்றிச் சிந்திப்பதில்லை. நீங்கள் அங்கு போகவும் அல்ஹைய்டாவுடன் சண்டையிடவும் அவர்களைக் கொல்லவும் முடியும். அது உங்களால் முடியும். ஆனால் ஆப்கானிஸ்தானை நீங்கள் துடைத்தழித்து விட முடியாது. ஆனால் இலங்கையில் அது தான் நடக்கிறது. தமிழ் மக்களையே துடைத்தெறிகிற ஒரு யுத்தம் நடைபெறுகிறது. அமெரிக்கா உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டிய விடயம் இதுதான். அவர்கள் உலகிலேயே பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடக்கூடிய முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள்.

அத்தோடு மிக முக்கியமான ஒன்று, ‘அவள் தமிழா. அப்போது நிச்சயமாகப் தமிழ்ப்புலி ஆகத் தான் இருக்க வேண்டும்’ என்பது போன்று பொறுப்பற்று வார்த்தைகளைத் தூக்கி எறிவதை தவிர்க்க வேண்டும். உண்மையிலேயே இதன் விளைவாக தாயகத்தில் மக்கள் கொல்லப்பட நேரிடும் என்பதை உணர வேண்டும்.

நான் இந்தியாவிலும் வசித்திருக்கிறேன். நான் எப்போதும் பிரயாணம் செய்து கொண்டிருப்பேன். ஒரு அகதி என்கிற போது அது தான் நேரும். எது உண்மை எது பொய் என்று நான் எனது சொந்த மூளையைப் பாவித்தே தீர்மானிக்க விரும்புகிறேன். எனக்குத் தெரியும் அது என்னுடைய சொந்த அனுபவத்தினால் விளைவது என்று. என்னுடைய இசையிலும் அவ்வாறு தான்.

நான் ஒரு இசைஞராக வர எண்ணியபோதே என்னுடைய இசையைப் பாவித்து ஏதோ ஒரு வகையான மாற்றத்தைக் கொண்டு வர விரும்பினேன். என்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த, என்னுடைய நம்பிக்கைகளைத் தெரிவிக்க எண்ணினேன். இசைத்தட்டுக்கள் விற்பனையாவதோ புகழோ அல்ல வெற்றி. அதற்கும் மேலாக மையநீரோட்டத்தில் அல்லது பிரதான போக்கில் வழமையாகக் கேள்விப்படாதவற்றைப் பற்றிய ஒரு பார்வை வீச்சை உருவாக்குவது, அதற்கான சிந்தனையைத் தூண்டுவது தான்.

எனக்குத் தெரியும் சில கலைஞர்கள் உண்மைகளைப் பேசுவதில்லை என்று. அவர்கள் அதனைப் பேச வெட்கப்படுகிறார்கள் என்று. உண்மை எவ்வாறிருந்த போதும் அவர்கள் மக்களைக் களிப்பூட்டவே இசையைப் பயன்படுத்துகிறார்கள.

இசை ஏற்கெனவே சமூக மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அது ஒன்றும் தவறானது அல்ல. வெற்றியடைய வேண்டும் என்ற அழுத்தத்தினாலும், கவர்ச்சிப்பாவையாகத் தோற்றமளிக்க வேண்டும் என்கிற அழுத்தத்தாலும் நாங்கள் உண்மைகளைப் பேசுவதற்கு ஒரு வகையில் வெட்கப்படுகிறோம். இசையை சமூகமாற்றத்திற்குப் பயன்படுத்துவதிலிருந்து விலகி நிற்கிறோம்.

நான் மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி அக்கறைப்படவில்லை. இது நான் பிரதிநிதித்துவப்படுத்தும் எனது மக்களைப் பற்றியது என்பது தான் உண்மை.
பேப்பர் பிளேன் என்கிற என்னுடைய பாடல் சிலருக்கு நாகசரமானதொன்றாக இருக்கிறது. வேறு சிலருக்கு அது எளிதில் புரிகிற தெளிவான மிகவெளிப்படையான பாடலாயிருக்கிறது.

ஓயாமல் பலர் கேட்கிற கேள்வி நீ பயங்கரவாதியா என்று. இல்லை. அதைப்பற்றி அதில் ஒன்றுமே இல்லை. அது ஆயுதங்களை விற்பனை செய்து பில்லியன் டொலர் கணக்கில் சம்பாதிக்கும் நிறுவனங்கள் பற்றியதாக இருக்கலாம். அது புலம் பெயர்பவர்கள் அதன் விளைவுகள் பற்றியதாக இருக்கலாம். அதனை எனது ரசிகர்களிடமே விட்டு விடுகிறேன்.

மாயா என்கிற மாதங்கி மாயா அருள்பிரகாசம். அண்மையில் வழங்கிய தொலைக்காட்சி நேர்காணல் GTN ற்காக விசேடமாக மொழியாக்கம் செய்யப்பட்டது.

வீடியோ செய்தி காண

http://www.globaltamilnews.net/includes/news_player.php?ptype=v&nid=5714

நன்றி : http://www.globaltamilnews.net/tamil_news.php?nid=5714&cat=1

One Comment

ezenyka

Aug 22nd, 2009

ezenyka…

Nicole Austin Coco Vid

Leave a Comment